Sunday 2 September 2012

நரோடா பாட்டியா தீர்ப்பு:வகுப்புவாத அரசியலுக்கு எதிரான எச்சரிக்கை – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

KM ஷரீப்


கோழிக்கோடு:நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது. இத்தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், நீதிபீடத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் அதன் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை தொடர்பான தீர்ப்பு இந்திய நீதித்துறையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.  இந்திய நீதித்துறை இன்னும் நியாயமாகவே செயல்படுகிது என்பதை அவற்றை நம்பும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது.  10 ஆண்டுகளாக பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் சட்டரீதியாக போராடி வந்த நரோடா பாட்டியா மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.  நீதிக்காக காத்துக்கொண்டிருக்கும் மற்ற மக்களுக்கும் இத்தீர்ப்பு மன தைரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பில் அரசியல் மூத்த தலைவர்களுக்கு தண்டனை கிடைத்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்திய தேசத்தில் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் அரசியல் தலைவர்கள் இது போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும்போது அவர்களுக்கு தண்டனை கிடைப்பது என்பது அபூர்வமானதாகும்.  குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் அம்மாநில அரசாங்கத்தாலே நடத்தப்பட்டுள்ளது என்பது இத்தீர்ப்பின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நரேந்திர மோடியை பிரதமராக்க முயற்ச்சிக்கும் பா.ஜ.க தலைவர்களுக்கும் இன்ன பிற ஆதரவாளர்களுக்கும் இத்தீர்ப்பு ஓர் எச்சரிக்கையாய் அமைந்துள்ளது.
அதே சமயம் குஜராத் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்ப்பு இன்னும் எஞ்சியுள்ளது.  2000ற்கும் அதிகமான மக்களை பலி கொண்ட இக்கலவரத்திற்கு மூளையாய் செயல்பட்ட நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த நிலைபாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பதாக கே.எம். ஷரீஃப் தெரிவித்தார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அணிசேரா நாடு என்பது அடிப்படை கொள்கையாகும்.  ஆனால் சமீப கால வரலாற்றை பார்க்கும் போது இந்த கொள்கையை மறந்து இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசியல் கட்சிகள் வெளியுறவுக்கொள்கைக்கு எதிராக இஸ்ரேலுடனான நட்புறவை மேற்கொண்டு வந்திருக்கின்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வற்புருத்தல் இருந்தும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் ஈரான் போன்ற இன்ன பிற அணி சேரா நாடுகளுடனான வர்த்தக உறவை தக்கவைத்துக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கப்படக்கூடிய ஒன்றாகும்.
இந்தியாவின் இத்தகைய செயல்பாடு அணி சேரா நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு மிகப்பெரும் கெளரவத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்திய அரசு தன்னுடைய வெளியுறவுக் கொள்கைகளில் உறுதியாக இருந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டுவிடாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என கே.எம்.ஷெரீஃப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.