Wednesday 17 April 2013

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை:உளவுத்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி அரசு!

Modi riots
புதுடெல்லி:கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி தீவைக்கப்பட்டதற்கு பதிலடியாகவே 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடந்தது என்ற அம்மாநில முதல்வர் மோடியின் வாதத்தை மறுக்கும் விதமாக குஜராத் மாநில போலீஸின் உளவுத்துறை ரிப்போர்ட் அமைந்துள்ளது. கலவரத்தை தடுக்க வாய்ப்புள்ளது என்று கூறி அஹ்மதாபாத் கட்டுப்பாட்டு அறை மற்றும் காந்தி நகர் போலீஸ் பவனிலும் இயங்கும் மாநில உளவுத்துறையின் தலைமையகத்திற்கும் நூற்றுக்கணக்கான வயர்லெஸ் மெஸேஜ்களும், ஃபாக்ஸ் மெஸேஜ்களும் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி கிடைத்துள்ளன.ஆங்கில தொலைக்காட்சி சேனலான ஹெட்லைன்ஸ் டுடே இந்த ரகசிய தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 27-ஆம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீயில் கரசேவகர்கள் கொல்லப்பட்ட பிறகு குஜராத்தின் பல பகுதிகளிலும் சங்க்பரிவார்கள் கலவரம் நடத்த சதித் திட்டம் தீட்டுவதாகவும், அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பதே உளவுத்துறை ரிப்போர்ட்டுகளின் சாரம்சமாகும். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை தடுக்க எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மோடி அரசு எடுக்கவில்லை.
அத்தோடு கலவரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. அதுமட்டுமல்ல, கலவரத்தை நடத்த ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் தலைவர்கள் உரையாற்றுவதாக உளவுத்துறை ரிப்போர்ட் அளித்த பிறகும் அவர்களை முன்னெச்சரிக்கையாக கைதுச் செய்ய போலீஸ் தயாராகவில்லை. இரண்டு கட்டுப்பாட்டு அறைகளிலும் கிடைத்த தகவல்களை, குஜராத் கலவர வழக்குகளை விசாரித்த சிறப்பு புலனாய்வு பிரிவு(எஸ்.ஐ.டி) அஹ்மதாபாத் நீதிமன்றத்தில் அறிக்கையுடன் இணைத்து தாக்கல் செய்துள்ளது. அதேவேளையில், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடக்கப்போவது குறித்த உளவுத்துறை எச்சரிக்கை ரிப்போட்டுகள் காணாமல் போய்விட்டன. எஸ்.ஐ.டியின் அறிக்கையில் உளவுத்துறையின் எச்சரிக்கை ரிப்போர்ட்டுகளை சேர்க்கவில்லை.
பிப்ரவரி 27-ஆம் தேதி மதியத்திற்கு பிறகு குஜராத்தின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் துவங்கிவிட்டன என்று செய்திகள் கூறுகின்றன. 27-ஆம் தேதி மாலை 6.30 க்கு 50 கரசேவகர்கள் அஹ்மதாபாத்தில் இருந்து மொடாஸா, வாட்கம் கிராமங்களுக்குச் சென்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீயைக் குறித்து உரையாற்றியுள்ளனர். ஒன்பது மணியளவில் ஆயிரக்கணக்கானோரைக் கொண்ட ஹிந்துத்துவா கும்பல் முஸ்லிம்களின் 10 கடைகளையும், ஏராளமான வாகனங்களையும் தீக்கிரையாக்கிய ரிப்போர்ட் போலீஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ளது.
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை மூன்று மணிக்கு ஆன்ந்த் ரெயில்வே நிலையத்தை வந்தடைந்துள்ளது. ரெயிலில் இருந்த கரசேவகர்கள் நான்கு முஸ்லிம்களை தாக்கியுள்ளனர். 65 வயதான அப்துல் ரஷீத் கொல்லப்பட்டார். மாலை 4.30 மணிக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் அஹ்மதாபாத் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்றும் அங்கு கலவரத்திற்கு வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளது.
சபர்மதி எக்ஸ்பிரஸ் அஹ்மதாபாத் ரெயில் நிலையத்தை வந்தடைந்தபோது ஆயுதம் ஏந்திய கரசேவகர்கள் இரத்திற்கு இரத்தம் என்று முழக்கமிட்டுள்ளனர். சாது சமாஜ் என்ற அமைப்பின் தலைவர் கோபால் நந்து மற்றும் உள்ளூர் வி.ஹெச்.பி தலைவர்கள் ஜுனகடில் 7.30 மணி முதல் ஒன்பது மணிவரை முஸ்லிம்களை பழிவாங்கவேண்டும் என்று கூறி ஆவேசமான உரையை நிகழ்த்தினர் என்று பாவ்நகரில் உளவுத்துறை அதிகாரி குஜராத் உளவுத்துறை ஐ.ஜிக்கு ஃபாக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார்.
பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு வி.ஹெச்.பி பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி, துணை செயலாளர்களான ஜெய்தீப் பட்டேல், கவுசிக் மேத்தா ஆகியோர் கரசேவகர்கள்சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீயில் மரணித்ததை கண்டித்து முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தனர். இந்த முழு அடைப்பிற்கும், மார்ச் ஒன்றாம் தேதி நடந்த பாரத் பந்திற்கும் மோடி அரசு ஆதரவளித்தது என்று பின்னர் எஸ்.ஐ.டி நடத்திய விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பெப்ருவரி 28-ஆம் தேதி நடந்த முழு அடைப்புதான் ஏராளமான முஸ்லிம்கள் தீயில் எரித்து கொல்லப்படவும், வீடுகளும், ஸ்தாபனங்களும் கொள்ளையடிக்கப்படவும் ஹிந்துத்துவா கும்பல்களுக்கு உதவிகரமாக அமைந்தது.
பிப்ரவரி 27-ஆம் தேதியோ, 28-ஆம் தேதியோ ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் அளவுக்கு அஹ்மதாபாத்தில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை என்று அஹ்மதபாத் போலீஸ் கமிஷனர் பி.சி.பாண்டே எஸ்.ஐ.டியிடம் அளித்த வாக்குமூலமாகும். பெப்ருவரி 27-ஆம் தேதி அம்பிகா நகரில் தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டு பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது உள்பட ஏராளமான சம்பவங்கள் குறித்து ரிப்போர்ட் கிடைத்தும் பெப்ருவரி 27-ஆம் தேதி பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை என்று அஹ்மதாபாத் கமிஷனர் வாக்குமூலம் அளித்துள்ளார். பெப்ருவரி 28-ஆம் தேதி அதிகாலையில் கரசேவகர்களின் உடல்கள் சோலா சிவில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் கூறுகிறது. அதிகாலை நான்கு மணிக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மருத்துவமனையில் திரண்டனர். 500 பேர் போக்குவரத்து கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.11.55 மணியளவில் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் வாகனங்களை தீக்கிரையாக்கினர். சோலா மருத்துவமனையில் உள்ள பணியாளர்களை பிணைக்கைதிகளாக்கினர்.ஆனால், எஸ்.ஐ.டிக்கு கமிஷனர் பாண்டே அளித்த வாக்குமூலத்தில் 11 மணிக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பதாகும்.
ரமோல் ஜனதா நகரில் இருந்து ஹட்கேஷ்வர் மயானத்திற்கு 10 உடல்களை சுமந்துகொண்டு ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இறுதியாத்திரையை துவக்கினர். மரண ஊர்வலம் நகரத்தின்  வழியே செல்லும்போது இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் குல்பர்க்சொசைட்டி, நரோடாபாட்டியா, நரோடாகாம் ஆகிய இடங்களில் முஸ்லிம் இனப்படுகொலையை நிகழ்த்தினர்.
பிப்ரவரி 28-ஆம் தேதி காலையில் நரோடாவிலும், குல்பர்கிலும் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் தலைவர்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் உரை நிகழ்த்தி ஆட்களை திரட்டும் தகவல் போலீஸ் தலைமையகத்திற்கு துல்லியமாக கிடைத்துள்ளது. 2 மணிக்கும் 6 மணிக்கும் இடையே நரோடாவிலும், குல்பர்க் சொசைட்டியிலும் பெண்களும், குழந்தைகளும் உள்பட 150 பேரை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொடூரமாக தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்தனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.