புதுடெல்லி:சட்டீஷ்கர் சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டிருக்கும் பழங்குடியின ஆசிரியையான சோனி சோரிக்கு மனநல பரிசோதனை நடத்துவதற்கான முடிவிற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மாவோயிஸ்ட் தொடர்பு என்று குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சோனி சோரிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு திரையிடவே மன நிலை பரிசோதனை நடத்தும் திட்டம் என்று மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. தேசிய மகளிர் கமிஷன் உறுப்பினர் ஷமீனா ஷஃபீக் சிறையில் சோனி சோரியை சந்தித்த பிறகு அவருக்கு மன நல பாதிப்பு உண்டு என்று கூறியது எதிர்ப்பை கிளப்பியிருந்தது.
கடந்த டிசம்பரில் சிறையில் சோனி சோரியை சந்தித்த பிறகு மகளிர் கமிஷன் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை. இதனிடையில் கமிஷனின் உறுப்பினர் இவ்வாறான அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று தேசிய இந்தியன் மகளிர் கூட்டமைப்பின்(NFIW) பொதுச் செயலாளர் ஆனி ராஜா கூறியுள்ளார்.
சோனி சோரிக்கு எதிரான வழக்குகள் ஒவ்வொன்றாக நீக்கப்படும் சூழலில் அவருக்கு மனநல சிகிட்சை என்ற பெயரில் தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கான முயற்சியை சட்டீஷ்கர் போலீஸ் நடத்துவதாக ஆனி ராஜா சுட்டிக்காட்டுகிறார்.
இப்பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பல்வேறு மகளிர் அமைப்புகள் சட்டீஷ்கர் முதல்வர் ரமண்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளன.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.